மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ்  மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும். அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *