தமிழ்நாட்டில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில், “கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ.2,938 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
சேலம் விமான நிலையத்துக்கான, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும், பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரித்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரம், இந்தியாவின் முக்கிய ஆன்மீக தலமாக திகழ்வதால், அங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
ஏற்கனவே ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில் சேவை உள்ள நிலையில் , விமான நிலைய அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.