மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பஜார் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) காலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
மேலும், மன்னாரில் காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த மின் உற்பத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலதிகமாக 4 லட்சம் நபர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
