இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி 

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, இது தொடர்பில் புதிய சட்டம் இயற்றப்படுமாயின் ஆதரவு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கம் பணம் இல்லை என்று கூறி தேர்தலை ஒத்திவைக்கும் இந்த நேரத்தில் குறித்த முன்மொழிவு தேர்தல் செலவைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி உட்பட ஒட்டுமொத்த தேசமும் முழுமையான ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது பொருத்தமானது என்றும் ஹர்ஷன ராஜகருணா கூறியுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம் 2025ஆம் ஆண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்பார்க்கலாம் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *